2100-க்குள் புவியின் வெப்பம் 1.7 முதல் 4.9 டிகிரி உயரும்!
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நாம் வாழும் இப்பூவுலகின் வெப்பம் 1.7 முதல் 4.9 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதென இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!
இந்த வெப்ப அதிகரிப்பின் காரணமாக கிரீன்லேண்ட் என்றழைக்கப்படும் வடதுருவ கண்டத்தின் பனிக்கட்டிகள் மிகப்பெரிய அளவில் உருகி அதன் விளைவாக உலகின் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் நீரேற்றமும், வெள்ளமும் ஏற்படும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தேசிய கடல் மற்றும் காற்று மண்டல வெப்பநிலை அளவீட்டு மையத்தைச் சேர்ந்த தாமஸ் கால், தேசிய காற்று மண்டல ஆராய்ச்சி மையத்தின் (என்.சி.ஏ.ஆர்.) கெவின் டிரன்பெர்த் ஆகிய இந்த இரண்டு விஞ்ஞானிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் வெப்பநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஆராய்ச்சி செய்து வந்தனர்.
உலகம் தொழிற்சாலை மயமாவதற்கு முன்பு இருந்ததைவிட இன்று நாம் சுவாசிக்கும் காற்றில் 31 விழுக்காடு கரியமில (கார்பன் டை-ஆக்சைட்) வாயு அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள கிரீன் ஹெளஸ் எனப்படும் வாயு மூடலின் காரணமாக இப்புவியின் காற்று மண்டலத்திற்குள் சூரிய ஒளி மீண்டும் முழுமையாக வெளியேறாததின் காரணத்தினால் இந்த வெப்ப உயர்வு ஏற்படுகிறது என்று இவர்கள் கூறியுள்ளனர்.
மனிதன் உருவாக்கிய புறச்சூழல், இயற்கை சக்திகளின் ஆதிக்கத்தை பெருமளவிற்கு குறைத்துவிட்டது என்றும், இதில் தொழிற்கழிவுகள் மிகப்பெரும் அளவிற்கு காற்று மண்டலத்தை மாசுபடுத்தியுள்ளது என்றும் கால், டிரன்பெர்த் கூறியுள்ளனர்.
நன்றி வெப்புலகம் . கொம்
0 மறுமொழிகள்: