Monday, December 27, 2004

வீணே தொலைந்து போன அந்த சில மணி நேரங்கள் தந்த கோரம்...!



இலங்கை மற்றும் தென்னிந்திய தென் கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமி அலைகளைத் (Tsunami) தோற்றுவித்த பூகம்பம் உருவான இடம்...!



ஒப்பீட்டளவில் வேகம் குறைந்த அலைநீளம் குறைந்த வீச்சுக் கூடிய சாதாரண கடலைகள்...!



ஓப்பீட்டளவில் வேகம் கூடிய சக்தி கூடிய அலை நீளம் கூடிய வீச்சுக் குறைந்த சுனாமி அலைகள்...!

பூமியில் கடலுக்கு அடியில் தட்டுக்களில் பிரயோகிக்கப்படும் விசைகள் காரணமாக இந்து சமுத்திர தட்டு ( Indian Ocean plate) யூரேசியன் தட்டுடன் (Eurasian plate) வழுக்கல் உற்று மெல்ல மெல்ல அதற்குக் கீழே சென்று கொண்டிருக்கிறது...! இதன் போது நிகழும் அசாதாரண பாறை அசைவுகள் காரணமாகவே பல மில்லியன் அணுகுண்டுகள் வெடிப்புக்கு நிகரான சக்தி பூகம்ப அலைகளாக கடலுக்குள் விடப்பட அவை அதி சக்தி மற்றும் அதிவேக இயக்கமுள்ள சுனாமி அலைகளாக ஆழ் கடலில் இருந்து அதிக வீச்சுக் கொண்ட சக்தி இழக்கும் அலைகளாக கரையோரங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. இதன் போதே பூமியில் நிலப்பரப்பினுள் ( கடற்கரைப் பிரதேசங்களுள்) பெருமளவில் கடல் நீர் உட்புகுந்து மீண்டும் அது கடலை நோக்கி மீள முற்படும் போது பாரிய சேதங்கள் ஏற்படுகின்றன. இது பூகம்ப அலைகள் தரையில் நேரடியாக அன்றி மறைமுகமாக ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகும்...!

இப்படிப் பாறைத் தட்டுக்கள் ஒன்றுக்கு கீழே ஒன்று நகரும் போது நிகழக் கூடிய மற்றுமொரு சாத்தியம் என்ன தெரியுமா..??! இந்த இந்து சமுத்திரத்தட்டு யுரேசியன் தட்டுக்கு கீழே தற்போது நகரும் வேகத்தை விட இப்படியான பூமி அதிர்ச்சிகள் காரணமாக வேகமாக நகர முற்படின் சில மணி நேரங்களுள் பல தேசங்கள் கடலுக்குள் நிரந்தரமாகச் செல்லும் நிலை ஏற்படலாம்...அப்போது பாதிப்பு என்பது இதை விடப் பலமடங்கு அதிகமாக இருக்கும்...!

அதுமட்டுமன்றி இப்படியான பாரிய பூமி அதிர்ச்சிகள் பூமியின் சுழற்சியைக் கூடப் பாதிக்கலாம் என்பதுடன் பாரிய எரிமலை வெடிப்புக்கள் பாரிய விண்கல் மொத்துகைகள் அணுகுண்டு வெடிப்புக்கள் என்பனவும் கடலில் சுனாமி அலைகளைத் தோற்றுவிக்கக் கூடிய வல்லமை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது...!

26-12-2004 இல் இந்தோனிசிய சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலில் நிகழ்ந்த அசாதாரண தட்டுக்களின் அசைவின் காரணமாக எழுந்த பூகம்ப அலைகளே ஆழ்கடலில் சுனாமி அலைகள் தோன்றவும் பின் அவையே தரையில் சக்தி இழக்கும் அதிக வீச்சுள்ள சாதாரண அலைகளாக மாறி சேதங்களை விளைவித்தன என்பதும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 8.9 இல் இருந்து 9.0 ரிச்ரர் அளவுகள் வரை அதிகரித்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

அத்துடன் இப்படியான உயர்ந்த அளவு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து பல தொடர்ச்சியான சிறிய அளவு நிலநடுக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன...! உலகில் கடந்த நூற்றாண்டில் அளவிடப்பட்ட உயர்ந்த அளவு நிலநடுக்கமாக 1964 இல் அலஸ்கா பகுதியில் பதிவு செய்யப்பட்ட 9.2 ரிச்ரர் அளவு பூகம்பத்தைத் தொடர்ந்து பல சிறிய அளவு தொடர் அதிர்வுகள் அவதானிக்கப்பட்டன. அதில் ஒன்று 7.3 ரிச்ரர் அளவு வரை இருந்தது...!

பூமி அதிர்வில் ரிச்ரர் அளவில் 0.1 அதிகரிப்பென்பது பல மடங்கு தாக்க அதிகரிப்பைக் குறிப்பதாகும்...! சாதாரண 0.1 அதிகரிப்பை குறிப்பதல்ல...! சிறிய மாற்றம் கூட பாரிய தாக்க அளவையே குறித்து நிற்கும்....!

இந்த (26-12-2004) பூமி அதிர்வின் தாக்கத்தை அமெரிக்க பூமி அதிர்ச்சி ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே அவதானித்த போதும் இவ்வளவு மோசமான சுனாமி அலைகள் உருவாகி அவை எத்திசையில் நகர்கின்றன எனபதைக் கண்டறியும் சாதனங்கள் எதுவும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைக்கப்படாமையால் சுனாமி அலைகளின் தாக்கம் பற்றி அவ்வவ்நாடுகளுக்கு அறிவிக்க முடியாமல் போனது என்றும் அதனாலேயே பலத்த உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டன என்றும் தெரியவருகிறது..!

இந்தோனிசியாவுக்கு அருகில் இருந்து புறப்பட்ட இந்த சுனாமி அலைகள் இலங்கை மற்றும் தென்னிந்தியக் கரைகளைத் தாக்க இரண்டு மணி நேரம் எடுத்துள்ளது..! இந்தக் காலத்துள் அவ்வலைகளின் அசைவுகளை அவதானித்து எச்சரிக்கை வழங்கி இருந்தால் பாரிய சேதங்களை தவிர்த்திருக்கலாம்...! இதை எதிர்காலத்திலாவது செய்வார்களா...????!

மேலே தந்த செய்திகள் தொடர்பான சில இணைப்புக்கள்...

Earthquake in Tamilnet

Earthquake animation in bbc

ஆதாரம் : Tamilnet,AP- Scinece, Reuters- Science & yahoo.com

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:01 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க