Monday, January 03, 2005

சுனாமி பற்றி விரியும் மேலும் சில செய்திகள்...!



சுனாமி தாக்குதல்.. (பழைய படம்)

ஆசிய நாடுகளின் கரைகளை அதிபயங்கர சுனாமி தாக்கப்போகிறது என்பது அமெரிக்காவுக்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பே தெரியும். அந்த நாட்டு விஞ்ஞானிகள் சுனாமி அலை உருவானதை அந்த நிமிடமே கண்டுபிடித்து விட்டனர். ஆனால், அதை வெளியில் சொல்லாமல் அழிவையும், மரணங்களையும் வேடிக்கை பார்த்தனர்

இப்படி ஒரு தகவல் உலகம் முழுக்க பரவி, அமெரிக்காவைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தி இருக்கிறது. ஆனால், இதை பெரிய அளவில் மறுக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

பூகம்பம் நிகழ்ந்தது, அடுத்த பதினைந்து நிமிடங்களில் எங்களுக்கு தெரியும். ஆரம்பகட்ட தகவல்களை வைத்து அதன் வீரியம் 8.0 ரிக்டர் என்று நினைத்தோம். ஆசியப் பகுதியில் இந்த பூகம்பம் அநேகமாக சுனாமியை உருவாக்க சாத்தியமில்லை என்றே முதலில் நினைத்தோம். ஒருமணி நேரம் கழித்துதான் பூகம்பம் 8.9 ரிக்டர் என்பதே எங்களுக்கு தெரியும் (பின்னர் அது 9.0 ரிச்டர் ஆனது). இது சுனாமியை உருவாக்குமா... அது எந்த திசையில் போகும் என்றெல்லாம் யூகம் செய்வது எங்கள் வேலையில்லை. ஒருவேளை சுனாமி உருவாகி ஆசியக் கரைகளை நோக்கி வேகமாக நகரும் வாய்ப்பு இருக்கிறது என்று அப்போது எங்களுக்குள் யூகமாக பேசிக் கொண்டோம். எல்லாம் உறுதி செய்யமுடியாத சாதாரண பேச்சுக்கள். அடுத்த இரண்டரை மணி நேரத்தில் இலங்கை தாக்கப்பட்ட பிறகுதான் சுனாமி உருவான தகவலே தெரியும் என்கிறார், அமெரிக்க சுனாமி பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் ஜெஃப் லாடவுஸ்.

உலக அளவிலான சுனாமி எச்சரிக்கை கூட்டமைப்பில் 26 நாடுகள் இருக்கின்றன. இதில் தாய்லாந்தும் ஒன்று. ஆனால், தாய்லாந்தும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மேற்குக் கரைதான் இப்போது தாக்குதலுக்கு ஆளானது. இந்த சிஸ்டம் கிழக்குக் கரைப் பகுதியில் மட்டுமே இருக்கிறது.

கடந்த 26ம் தேதி கோர தாண்டவமாடிய இந்த சுனாமி, முன்கூட்டியே உணரப்பட்டது ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான்... அது ஆஸ்திரேலியாவில்!



சுனாமி எச்சரிக்கை கருவியின் செயல்பாடு..

இந்தோனேஷியாவை சுழற்றியடித்துவிட்டு, அதைத் தாண்டி ஆஸ்திரேலியாவுக்குப் பயணித்த சுனாமியை அந்த நாட்டு கடல் பகுதியில் இருந்த எச்சரிக்கைக் கருவிகள் கண்டுபிடித்தன. ஆனால், அது வலுவிழந்து அப்போது இரண்டு அடி உயரம் மட்டுமே இருந்தது. அதனால் ஆஸ்திரேலியா சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

இப்போது பாதிக்கப்பட்டிருக்கும் பதினோரு நாடுகளில் சுனாமி வருவதை எச்சரிக்கும் கருவிகள் இல்லை. உடனடியாக அதைப் பொருத்த வேண்டும் என்ற குரல்கள் இப்போது எழ ஆரம்பித்திருக்கும் நிலையில், இது அவசியமா...? என்ற கேள்வியை சிலர் எழுப்புவதுதான் வேதனையான விஷயம். அவர்கள் சொல்லும் காரணம் வித்தியாச மானது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் வைத்திருக்கிறது என்றால், அங்கு அதன் தாக்குதல் அதிகம். கடந்த நூறு வருஷங் களில் பசிபிக் பகுதியில் 800 சுனாமிகள் உருவாயின. ஆனால், இந்தியாவை ஒட்டிய தெற்காசியப்பகுதியில் இதே காலத்தில் உருவான சுனாமிகள் வெறும் இரண்டுதான் என்பது அவர்கள் வாதம்.

ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அந்த எண்ணூறு சுனாமி களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட இப்போது நடந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பலமடங்கு அதிகம். இந்தியாவை இதற்கு முன்பு மூன்று தடவைகள் சுனாமிகள் தாக்கியிருக்கின்றன. 1509ல் ஒரு தடவை, 1881ல் இரண்டாவது தடவை... அந்தமானில் உருவாகி கிழக்கு கடற்கரையை 1941ல் தாக்கியது மூன்றாவது சுனாமி. ஆனால், இவற்றில் இழப்புகள் அதிகம் இல்லை. இம்முறைதான் பயங்கரம்.

அமெரிக்கா பல ஆண்டுகளாகவே உலக சுனாமி எச்சரிக்கை சிஸ்டத்தை உருவாக்கி, அதில் எல்லா நாடுகளும் இணைய வேண்டும் என்று வற்புறுத்திவருகிறது. இப்போது நேர்ந்தது போன்ற துயரங்கள்தான் மக்களை எச்சரிக்கை சிஸ்டத்தின் அவசியத்தை உணர வைக்கும். இனியும் இந்தியா போன்ற நாடுகள் தாமதிக்கக் கூடாது.

சுமத்ரா தீவுகளின் கரைப்பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஏரியா. அந்தமான் நிக்கோபர் தீவுகளும் அபாய வளையத்தில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, ஈரான், தாய்வான் போன்ற நாடுகளில் அடிக்கடி பூகம்பம் வருகிறது. டைம்பாமின் மீது உட்கார்ந்து கொண்டு முடிவெடுக்க தாமதிக்கக் கூடாது என்கிறார் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் இயக்குநர் கென் ஹட்நெட்.

இந்தியா இப்போது அமெரிக்க கூட்டமைப்பில் சேராமல், தனியாக சுனாமி எச்சரிக்கை சிஸ்டத்தை உருவாக்கப்போகிறது. நூற்றியிருபது கோடி ரூபாய் செலவுபிடிக்கும் இதை நிறுவி முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார், நம்முடைய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபல்.

சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் துறைமுகங்களிலும், கரையோரங்களிலும் மானிட்டர்களை வைத்து கண்காணித்தார்கள். ஆனால், இதன்மூலம் சீக்கிரமே தகவல் கிடைக்காது. அதன்பிறகு கடலுக்கு நடுவில் தண்ணீர் மீது மிதக்கவைக்கும் மானிட்டர்களை பொருத்தினார்கள். இது ஒவ்வொன்றும் இரண்டு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் சமாச்சாரம். ஆனால், இதுவும் துல்லியமாக சுனாமியின் வீரியத்தைக் காட்டாது. இப்போது ஆழ்கடல் சுனாமி கணிப்பு அறிவிப்பு சிஸ்டம் (Deep ocean Assessment and Reporting Tsunamis- DART) என்ற புதுக்கருவி வந்துள்ளது. இந்தியா இதைத்தான் பொருத்துவதாக இருக்கிறது. இதன்விலை கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி. இதன் வருடாந்திர பராமரிப்பு செலவு, இருபத்தைந்து லட்சம் ரூபாய். ஆழ்கடலில் ஆறு கிலோமீட்டர்



சமீபத்திய சுனாமி தாக்கியவிதம்...

ஆழத்தில் இதை வைத்தால்கூட துல்லியமாக தகவல் தரும். பசிபிக் பெருங்கடலில் இப்படிப்பட்ட ஏழு கருவிகளைப் பொருத்தியிருக்கிறது அமெரிக்கா. கடலின் அடிப்புறத்தில் இந்தக் கருவி இருக்க, அதன் மானிட்டர் கடலின் மேல்மட்டத்தில் இருக்கும். கடல் மட்டத்தில் ஒரு சென்டிமீட்டர் வித்தியாசம் இருந்தாலும் இது கண்டுபிடித்துவிடும். இதைத் தொடர்ந்து இதோடு இணைக்கப்பட்ட கருவிகள் சுனாமி அலையின் வேகத்தைக் கணித்து செயற்கைக்கோளுக்கு தகவல் அனுப்பும். அதிலிருந்து பூமிக்கு திரும்ப தகவல் வந்தடையும். எல்லாமே சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் முடிந்துவிடும்.

ஆனால், வெறுமனே அதை நிறுவினால் மட்டும் போதாது என்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள் சிலர்.

இவ்வளவு நவீன கருவியைப் பயன்படுத்த நம்மிடம் செயற்கைக்கோளும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படை, பூகம்பம் நிகழ்ந்தால் அதை உடனே கண்டுபிடிக்கும் மானிட்டர்கள். சுனாமியைக் கண்டுபிடிக்கும் கருவியுடன் இந்த மானிட்டர்களும் இணைந்து செயல்படவேண்டும். அப்போதுதான் உரிய பலன் இருக்கும். கடலுக்குள் பூகம்பம் இல்லாத சமயத்தில் வெறுமனே ஏற்படுகிற கடல்மட்டத்தின் மாறுபாடுகளைக்கூட சுனாமி எச்சரிக்கை கருவி நமக்கு காட்டிவிடும். அதைப்பார்த்து நாம் பயந்து நிற்காமல் இருக்க, பூகம்பத்தைக் கண்டுபிடிக்கும் மானிட்டர்களும் அவசியம் தேவை.

இந்த விஷயத்தில் நாம் ரொம்ப மோசமாக இருக்கிறோம். உலகின் எந்த மூலையில் பூகம்பம் நிகழ்ந்தாலும் அதை அந்த விநாடியே அமெரிக்கா கண்டுபிடித்து பதிவு செய்கிறது. பதினைந்தே நிமிடங்களில் அதுபற்றி அறிக்கை வெளியிடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்தியாவில் எங்காவது பூகம்பம் நிகழ்ந்தால்கூட அதைப் பார்த்துதான் பூகம்பத்தின் ரிக்டர் அளவைத் தெரிந்து கொள்கிறார்கள். அமெரிக்கா கிட்டத்தட்ட இருநூறு மானிட்டர்களை வைத்து எல்லாவற்றையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்துக் கண்காணிக்கிறது. இந்தியாவில் இருக்கும் 58 பூகம்ப மானிட்டர்களில் பதினேழு மட்டுமே



சுனாமி தாக்குதல்.. (பழைய படம்)

நவீனமானவை. அடிக்கடி பூகம்பம் நடக்கும் அந்தமானில்கூட பழைய மாடல் அனலாக் மானிட்டர்களை வைத்திருக்கும் கொடூரம், இந்தியாவில் மட்டுமே சாத்தியம். முதலில் இதையெல்லாம் நவீனப்படுத்திவிட்டு அப்புறம் சுனாமி எச்சரிக்கை சிஸ்டத்தை ஆரம்பிக்கட்டும் என்கிறார்கள் அந்த இந்திய விஞ்ஞானிகள்.

அவர்கள் வலியுறுத்தும் இன்னொரு விஷயம், இந்தியா மட்டும் இதை செய்தால் போதாது. இந்தியாவின் மூன்றுபுறக் கடல்களிலும் உள்ள நாடுகளை இணைத்து இந்த சிஸ்டத்தை அமல்படுத்தினால்தான் இந்தியக் கரைகளைக் காப்பாற்ற முடியும். அதைவிட பெரிய வேலை, இந்தியக் கரையோரங்களில் லட்சக்கணக்கில் இருக்கும் மீனவர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உணரவைப்பது. அடுத்தது, அவர்களுக்கு தகவல் தொடர்பு எப்படி போய்ச்சேர வேண்டும் என்பதற்கு சிஸ்டம் உருவாக்குவது என்கிறார்கள்.

ஓய்வுபெற்ற இந்திய புவியியல்துறை அதிகாரி ஒருவர் இதைப்பற்றி பேசும்போது, இதற்கெல்லாம் பெரிய அளவிலான திட்டமிடல் தேவை. ஆனாலும் இது அவசியம்தான். சுனாமி எப்போதோ நூறு வருஷங்களுக்கு ஒருதடவை வரும். அதற்காக இவ்வளவு செலவு தேவையா என்று அதிகாரிகள் இரக்கமில்லாமல் கேட்கக்கூடும். இந்த பரபரப்பு குறைந்ததும், அதை அரசியல்வாதிகள் மறந்துவிடவும் கூடும். ஆனால், மற்ற வளர்ந்த நாடுகளைப் போலில்லாமல் நாம் எத்தனை உயிர்களை அதிகமாக இழந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். எப்போதோ ஒருதடவை வரும் போருக்காக, ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து ராணுவத்தை உருவாக்குகிறோமே... அதுபோலத்தான் இது! என்கிறார்.

இழந்தவர்களுக்கு அதன்வலி தெரியும்! இனி உலகின் எந்த மூலையில் பூகம்பம் நிகழ்ந்தாலும், அவர்கள் கரைகளைத் தாண்டி பீதியோடு வெளியேறிவிடுவார்கள். அப்போதெல்லாம் பெரும் குழப்பம் நடக்கக்கூடும். அவர்களுக்கு அதுமாதிரி சமயங்களில் ஆபத்தில்லை என்பதையும் உணர வைக்கவேண்டியது அரசின் கடமை.

சுனாமி எச்சரிக்கை சிஸ்டங்கள் அவ்வளவு துல்லியமாக வேலை செய்யாவிட்டால், வேறுவிதமான பிரச்னைகள் எழுந்துவிடும். அமெரிக்கா கடந்த 1948ல் ஆரம்பித்து மூன்று தடவைகள் சுனாமி வருகிறது என்று எச்சரிக்கை கொடுத்து, கடைசியில் புலி வருது கதையாகிவிட்டது. ஹவாய் தீவுகளில் இப்படி ஒரு தடவை தப்பான எச்சரிக்கை கொடுத்து, மக்களை அவசரமாக காலி செய்து வெளியேற்ற ஆன செலவு முந்நூற்றைம்பது கோடி. பலபேர் பதற்றத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்துபோனார்கள்.

கடைசியில், இதை தப்பான எச்சரிக்கை என்று சொல்லமுடியாது. சுனாமி உருவானது உண்மைதான். அதன் வீரியத்தை சரியாக கருவிகள் உணராமல் போயிருக்கும். அது சும்மா இரண்டு அடி உயரத்துக்கு சாதாரண அலை மாதிரி கரையில் வந்து முடிந்திருக்கும் என்று இதற்கு விளக்கம் கொடுத்தது அமெரிக்கா.

Thanks: JunierVikadan & forum of www.yarl.com

பதிந்தது <-குருவிகள்-> at 10:45 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க