Thursday, February 21, 2008

அமெரிக்க செயற்கைக் கோள் அழிப்புடன் தீவிரமாகுமா நட்சத்திரப் போர்..?!



அமெரிக்க இராணுவ உளவு செயற்கைக் கோள் அமெரிக்க கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்ட முறை.

1980 களில் பெரிதும் பேசப்பட்ட அமெரிக்காவின் நட்சத்திரப் போர்த்திட்டம் (விண்வெளியில் போரிடல்) தற்போது ஏவுகணை தடுப்பு சுவரெழுப்பல் என்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் புதிய உச்சரிப்பின் கீழ் தீவிரமடைய ஆரம்பித்திருக்கிறது.



மூன்று கட்ட ஏவுகணையான அமெரிக்க எஸ் எம் 3 ஏவுகணை கடற்படைக் கப்பலில் இருந்து இலக்கு நோக்கி பறக்கும் காட்சி.

செயலிழந்து போன அமெரிக்க உளவுச் செயற்கைக் கோள் (USA 193) பூமியை நோக்கி மோதும் வகையில் நகர செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பப் பிறழ்வால்தான் நகர்ந்ததா என்ற கேள்வி, அச்செயற்கைக் கோளை அமெரிக்க கடற்படை பசுபிக் சமுத்திரத்துக்கு மேலே 287 கிலோமீற்றர்கள் தொலைவில் வைத்து எஸ் எம் 3 என்ற ஏவுகணை மூலம் தாக்கியழித்த நிகழ்வை அடுத்து உலகில் எழுந்துள்ளது.

அதுமட்டுமன்றி இச்செயற்கைகோள் அழிப்பின் பின்னர் அமெரிக்க இராணுவ மையமான பென்ரகன் விட்ட அறிக்கையில் இவ்வழிப்பு செயற்பாட்டின் மூலம் அமெரிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறை திறம்படச் செயற்படுவதாக பெருமிதம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அமெரிக்காவின் இச்செயற்பாடு குறித்து ரஷ்சியாவும் சீனாவும் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்திய ஆண்டொன்றில் செயழிலந்து போன தனது செயற்கைக் கோள் ஒன்றை சீனா மிக ரகசியமாக பூமியில் இருந்து ஏவிய ஏவுகணை மூலம் விண்வெளியில் வைத்து அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டை அப்போ அமெரிக்கா கண்டித்திருந்ததுடன் நட்சத்திரப் போர் குறித்த அச்சமும் வெளியிட்டிருந்தது.

தற்போது தானே அவ்வாறான ஒரு செயலைச் செய்துள்ளதுடன் ஆபத்தான மாசுக்களை பூமிப் பந்தின் மீது விதைத்தும் விட்டுள்ளது. அமெரிக்க செயற்கைக் கோளில் அடைக்கப்பட்டிருந்த ஆபத்தான மாசுகள் துகள்களாக பூமியின் மேற்பரப்பை அடையலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அமெரிக்கா தனது ஏவுகணை தடுப்புப் பொறிமுறையைப் பரீட்சிக்கவும் தனது உளவு செயற்கைக் கோள் பற்றிய தகவல்கள் எதிரி நாடுகளிடம் சிக்கிவிடாமல் இருக்கவும் பூமிப் பந்து மாசடைவது குறித்த எந்த அக்கறையுமின்றி இச்செயலை செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

எதுஎப்படியோ உலக வல்லரசுகள் நட்சத்திரப் போருக்கு தம்மை தயார் செய்யும் தீவிர நிலைக்கு சென்று விட்டனவோ என்ற வினவல் உலக மக்கள் மத்தியில் இப்போ எழுந்திருக்கிறது..! மனிதன் பூமியில் மோதியது போதாதென்று.. விண்வெளியிலும் மோதிக்கொள்ளப் போகிறானா..??!பூமியையும் அழித்து தன்னைத்தானேயும் அழித்துக் கொள்ளப் போகிறானா..??!

அமெரிக்க செயற்கைகோள் தாக்கி அழிக்கப்படும் பொழுது எடுக்கப்பட்ட காணொளி.

மேலதிக தகவல் இங்கு 1

மேலதிக தகவல் இங்கு 2

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:17 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க