Friday, April 04, 2008

கடற் குதிரைகள் வழியில்.. குழந்தை பெற்று அம்மா ஆகிறார் அப்பா.



சிசுவைச் சுமந்து அம்மாவாக இருக்கும் ஆண் (Thomas Beatie ).

உலகில் இயற்கையின் நியதிக்கமைய மனிதரில் பெண்கள் தான் கருத்தரித்து அதன் பின் சிசுவை கருப்பையில் சுமந்து, கிட்டத்தட்ட 10 மாதங்கள் அச்சிசுவை வளர்ச்சியடைய செய்து குழந்தையாகப் பெற்றுக் கொடுக்கின்றனர்.

ஆனால் நவீன மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு இப்போ ஆண்களும் குழந்தை பெற செய்யப்படுகிறது. அந்த வகையில் பெண்ணின் கருப்பை மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புக்களை ஆண் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் மாற்றீடு செய்து, அவ்வாறு மாற்றீடு செய்யப்பட்ட கருப்பையில் செயற்கை முறையில் கருத்தரித்த முளையத்தை வளர்க்கச் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது சிந்திக்கப்பட்டு வரும் நிலையில், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒருவர் ஆணாக இருந்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.

Thomas Beatie எனும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றம் பெற்ற அமெரிக்க ஆண் கூறுகிறார் எல்லா மனிதனுக்குமே குழந்தை என்றால் ஆசை இருக்கும் அது பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு என்றானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆணாக தான் கருவைச் சுமப்பதை மகிழ்ச்சியாக உணர்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

இவர் தனது மார்பகங்களை சிறிதாக்கி, தட்டையான நெஞ்சுப் பகுதியை உருவாக்கும் சத்திர சிகிச்சையையும் ஆணாகத் தோற்றமளிக்கும் சிகிச்சைகளையும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொண்ட போதும் தற்போதுதான் இயற்கையாக அவரிடமிருந்த கருப்பையைப் பாவித்து செயற்கை முறையில் கருத்தரித்து கடந்த 6 மாதங்களாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவைச் சுமந்து கொண்டிருக்கிறார். இன்னும் சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் இவர் குழந்தை பெற்றெடுத்ததும் தகப்பனாகவே செயற்படுவார் என்று இவரின் மனைவி Nancy கூறுகிறார். தான் அந்தக் குழந்தைக்கும் நல்லா அம்மாவா இருப்பேன் எங்கிறார் ஏலவே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான நான்சி கணவனுக்கு ஒத்துழைத்தவராக.



கருக்கட்டிய நிலையில் விசேட பையில் தனது சந்ததியைக் காவும் ஆண் கடற் குதிரை.

அதிசயமான தம்பதிகள் தான். இது மனித குலத்துக்கு அதிசயமாக இருக்கலாம்.. ஆனால் விலங்கு இராச்சியத்தில் சில மீனினங்கள், (குறிப்பாக கடற் குதிரை இனங்களில் ஆண் மீன்கள்) அவற்றின் வயிற்றுப் புறமாக உள்ள விசேட பை போன்ற அமைப்பினுள் கருக்கட்டிய நிலையில் உள்ள முட்டைகளை (பெண் கடற் குதிரை முட்டைகளை ஆணின் விசேட பையினுள் இடும். அங்கு ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கருக்கட்டிக் கொள்ளும்) அல்லது குஞ்சு நிலையில் உள்ள சந்ததிகளை தாங்கி வளர்ப்பதை விலங்கியல் நடத்தைகளை ஆராய்கையில் அவதானிக்கலாம். அப்படி இன்னும் பல உயிரினங்களிலும் தந்தை பிள்ளைப் பராமரிப்புச் செய்வது அல்லது பிள்ளையை சுமப்பது நடக்கத்தான் செய்கிறது.

பொதுவாக ஆணும் பெண்ணும் இணைந்ததால் உருவான அங்கத்தவர்கள் தான் இந்த உயிரின உலகில் அநேகராக உளர்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 2:33 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க