Thursday, May 08, 2008

இந்தியா நீண்ட தூர வீச்சுக் கொண்ட ஏவுகணையை சோதித்தது.



உலகில் நீண்ட தூர வீச்சுள்ள ஏவுகணையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அக்னி- 3 ஐ சோதித்ததன் வாயிலாக இந்தியாவும் குறித்த நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்கிறது.

அக்னி - 3 எனும் தரையில் இருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அதன் நிர்ணயித்த வீச்சான 3000 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கடந்து சென்று வங்காள விரிகுடாவில் வைக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக இவ்வேவுகணைச் சோதனையின் பின் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணை சீனாவின் முக்கிய நகரங்களை குறிவைத்துத் தாக்கப் பயன்படலாம் என்பதும், 1.5 தொன் எடையுள்ள அணு ஆயுதத்தை இதன் மூலம் காவிச் செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். அதுமட்டுமன்றி இவ்வேவுகணையை நகரும் வாகனங்களில் அமைந்த ஏவுதளத்தில் இருந்து எங்கு வைத்தும் ஏவ முடியும்.

ஏலவே அக்னி - 1 என்ற 750 கிலோமீற்றகள் வீச்சுள்ள ஏவுகணையையும் அக்னி - 2 என்ற 2000 கிலோமீற்றர்கள் வீச்சுள்ள ஏவுகணையையும் இந்தியா தயாரித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பல தடவைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டும் உள்ளன..!

இதற்கிடையே இந்தியாவின் போட்டி நாடான பாகிஸ்தானும் அடிக்கடி சீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை தனது சொந்தத் தயாரிப்பின் கீழ் தயாரித்துப் பரிசோதித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அண்மையில் பாகிஸ்தானும் Hatf VI அல்லது Shaheen-II எனும் 2500 கிலோமீற்றர்கள் வீச்செல்லையுள்ள அணு ஆயுதங்களைக் காவிச் செல்லவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருந்தமை இவற்றுள் முக்கியமான ஒன்றாகும். இதுவே பாகிஸ்தானின் நீண்டதூர ஏவுகணையாகவும் இன்று இருக்கிறது.

அடிக்கடி நிகழும் இந்த ஏவுகணைப் பரிசோதனைகளும் மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளும் தெற்காசிய பிராந்தியம் இராணுவ அச்சுறுத்தலுக்கான பிராந்தியமாக உருவெடுத்து வருவதையே காட்டிநிற்கிறது.

மேலதிக தகவல் இங்கு (இந்திய ஏவுகணை பற்றியது)

மேலதிக தகவல் இங்கு (பாகிஸ்தான் ஏவுகணை பற்றியது)

மேலதிக தகவல் இங்கு (பாகிஸ்தான் 08-05-2008 இல் செய்த ஏவுகணை பரிசோதனை பற்றியது)

Labels:

Wednesday, May 07, 2008

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.



கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: ,

Tuesday, May 06, 2008

இந்தியர்களுக்கு தொப்பை ஏன்?



ஆசியாவின் இந்திய வம்சாவளியினர் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எளிதாக உடல்பருமன் பிரச்சினையில் சிக்குவதற்கான காரணத்தை தாங்கள் கண்டறிந்துள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட மரபணுத்தொடருக்கும், உடல் பருமனுக்கும், நீரழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக, லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட மரபணுத்தொடரை தங்களிடம் கொண் டிருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும் போது, மற்ற இனமக்களைவிட, மூன்றில் ஒருபங்கினர் இந்திய வம்சாவளியினராக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக, இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில்: பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels:

Friday, May 02, 2008

மோசமான கிருமிகளை காவும் கணணி விசைப்பலகைகள்.


பார்த்தால் தெரியாது ஆனால் பாதிக்கக் கூடும். இது விடுகதை போல இருக்கலாம். ஆனால் உண்மை.

அதாவது கணினியில் நாம் செய்திகளை தட்டச்சு செய்யப் பயன்படுத்தும் தட்டச்சுப் பலகையில் (கீ போர்ட்டில்) இருக்கும் கிருமிகள், கழிவறையிலுள்ள கழிப்பிட இடத்தின் மூடியில் இருக்கும் கிருமிகளைவிட கூடுதலாக இருக்கின்றன என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவை விஷத்தன்மை கொண்டதாக மாற்றக் கூடிய ஈ கோலி (E.coli) என்று அழைக்கப்படும் நுண்கிருமியின் ஒரு வகை உட்பட பல வகையான நுண்கிருமிகள் லடசக் கணக்கில் ஒரு கீ போர்டில் (விசைப்பலகையில்) இருக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் பிரிட்டனிலுள்ள 30 அலுவலகங்களிலுள்ள கீ போர்ட்டை நுணுக்குக்காட்டியில் பார்த்தபோது அவர்களுக்கு தெரிந்தது அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு விடயம். அதாவது பார்த்தாலே பளிச் என்றிருக்கும் ஒரு கழிப்பறையின் டாய்லட் சீட்டில் இருக்கும் கிருமிகளை விட அதிக அளவில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கிருமிகள் இருப்பதை அந்த ஆய்வாளர்கள் கண்டார்கள்.

நன்றி: பிபிசி/தமிழ்

Labels:

Wednesday, April 30, 2008

WWW. க்கு வயது 15.



www. ஐ கண்டறிந்து அதன் மூலம் இணைக்கப்படும் இணையத்தளங்களூடு தரவுகளை பகிர்வதை உலகுக்கு அறிமுகப்படுத்திய Sir Tim Berners-Lee.

நாம் எல்லாம் இன்று இணைய உலகில் சஞ்சரிக்கவும் எம்மை அடையாளமிடவும் பாவிக்க உதவும் உலக வலைப்பின்னலுக்கான இணைய இணைப்புக் குறியீடான world wide web (www.)யும் இணையத்தையும் (internet) இணையத்தளப் பாவனையும் (web site) ஒருங்கிணைத்து பொது உலகுகப் பாவனைக்காக வெளியிட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தில் பெருமளவில் செல்வாக்குச் செய்யும் இந்த www. கடந்த 15 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியிலும் சரி உலக மக்களை இணையவழி இணைத்து ஓர் கூரையின் கீழ் உறவாட தரவுகளைப் பரிமாற ஊக்குவிப்பதிலும் சரி அசுர வளர்ச்சி கண்டு வந்திருகிறது.

எதிர்காலத்தில் இந்த www. இணைய இணைப்பி மூலம் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இணையத்தளங்கள் பெருகி இருக்கும் என்பது மட்டுமன்றி இலகுவாக எல்லோராலும் கையாளப்படவும் வகை செய்யப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் இன்று சுமார் 165 மில்லியன் இணையத்தளங்கள் உள்ளன.

முதலாவது இணையத்தளம் இணைய வலையில் ஏற்றப்பட்டது 1991 இல் ஆகும். www. அறிமுகப்படுத்தப்பட்டது 1994 இல் ஆகும்..!

இன்று www. வழி போகாத இளைய சமூகமே இல்லை எனும் அளவுக்கு அது சமூகத்தில் செல்வாக்குச் செய்து வருகிறது. www. மூலம் இணைய வழி சென்று தரவுகளை பெறும் வசதிகளை எமக்கு கண்டறிந்து அளித்தவர் சேர் Tim Berners-Lee என்பவராவார்.

www. பல வகை இணையத்தளங்களுக்கு எம்மை இணைப்பதில் காட்டும் பல நன்மைகளூடு சில தீமைகளையும் தன்னக்கத்தே கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது..!

மேலதிக தகவல்கள் இங்கு 1

மேலதிக தகவல்கள் இங்கு 2

மேலதிக தகவல்கள் இங்கு 3

Labels:

Monday, April 28, 2008

10 செய்மதிகளை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவியது இந்திய ராக்கெட்.



இந்தியாவில் ஒரே ராக்கெட் மூலமாக 10 செய்மதிகள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் இது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஒன்று தெளிவான காலநிலையில், செம்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் புகையை வெளிவிட்டவாறு சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்பட்டபோது, விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்தியாவின் உட்கட்டமைப்பு மற்றும் மூல வளங்களைக் கண்காணிக்கும் ரிமோட் சென்ஸிங் செய்மதியையும், மற்றும் ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளின் சிறு செய்மதிகளையும் அந்த ராக்கெட் தூக்கிச் சென்றது.

இந்த செய்மதிகள் ஒவ்வொன்றும் 10 நிமிட இடைவெளியில் ராக்கெட்டிலிருந்து தத்தமது நிலைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

ரஷ்சியா கடந்த ஆண்டில் 16 செய்மதிகளை ஒரே ஏவுகையில் விண்ணுக்கனுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ரஷ்சியாவைத் தொடர்ந்து இந்தியா இதைச் செய்துள்ளது..!

நன்றி: பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels:

Tuesday, April 22, 2008

தாவர எரிபொருள் உற்பத்தியால் உலகில் உணவு உற்பத்தி பாதிப்பு.



தாவர எரிபொருளால் உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்ககள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தென் அமெரிக்க நாடான போலிவியாவின் அதிபர் இபோ மோரால்ஸ், அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தாவர எரிபொருளால் உலகில் பொதுமக்களுக்கான உணவுப் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்ற பரந்துபட்ட கவலை தற்போது உலகில் எழுந்திருக்கும் நிலையில் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, ரத்தக் குழாய்களுக்குள் அது உறைவதை தடுக்க ஹெப்பாரின் மருந்து பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஹெப்பாரின் மருந்தை எடுத்துக்கொண்டதன் காரணமாக 81 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது பற்றியும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்.

Labels: ,